*அறங்காவலர் குழு தலைவர் வழங்கினார்
திருமலை : திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 3500 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை அறங்காவலர் குழு தலைவர் வழங்கினார். திருப்பதி மகதி அரங்கில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் பேசியதாவது: தேவஸ்தான ஊழியர்களுக்கு தனது கைகளால் வீட்டு மனை பட்டா வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
17 ஆண்டுகளுக்கு முன்பு, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக இருந்தபோது, அப்போதைய முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரருடன் ஊழியர்களுக்கான வீட்டுமனைப் பிரச்னை குறித்து பேசினேன். ஒய்.எஸ்.ராஜசேகர் தனது அழுத்தம் காரணமாக ஊழியர்களுக்கு வீடுமனைகளை 2009 ஆண்டு இதே மேடையில் வழங்கியதாக அவர் நினைவுபடுத்தினார்.
ஆறாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தேவஸ்தான கல்வி நிறுவனங்களில் படித்தேன். மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் மற்றும் தற்போதைய முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ஆட்சியில் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து ஊழியர்களுக்கும் வீட்டு மனை வழங்கும் விவகாரம் குறித்து முதல்வர் ஜெகன்மோகனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘அனைத்து ஊழியர்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதாக தெரிவித்தார்.
ஆனால், இதில் சட்டப்படி சில சிக்கல்கள் இருப்பதால், அனைத்து ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் குறைந்தப்பட்ச விலையில் வீட்டுமனை வழங்க முதல்வர் ஒப்புக்கொண்டார். இதற்காக இ.ஓ. தர்மா, மாவட்ட ஆட்சியர் வெங்கடரமணா, ஜே.இ.ஓ.க்கள் சதா பார்கவி, வீரபிரம்மம் மற்றும் இதர நிர்வாகக் குழுவினர் இத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்றதாக அவர் பாராட்டினார்.
மேலும் பகலியில் 350 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு வழங்கிய மாவட்ட ஆட்சியர் வெங்கடரமணா முயற்சியும் பாராட்டுக்குரியது. இதற்காக, புதன்கிழமை நடைபெற்ற அறங்காவலர் குழுக் கூட்டத்தில் ₹87 கோடி ஒதுக்கீடு செய்வதில் செயல் அதிகாரி சிறப்பு கவனம் செலுத்தினார். எத்தனை சதிகள் செய்தாலும் ஊழியர்களுடனான என் உறவை முறிக்க முடியாது என்று கருணாகர் தெளிவுபடுத்தினார்.
ஊழியர்களுக்கான வீட்டுமனை பிரச்சினையை பரிசீலிப்பதாக பல அரசுகள் கூறியது. ஆனால் ஒய்.எஸ்.ராஜசேகர், அவரது மகன் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ஆகியோர்தான் அதை நிறைவேற்றியுள்ளனர். ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இதை எப்போதும் மனதில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஜெகன்மோகன் அரசால்தான் தூய்மை பணியாளர்களுக்கு ₹5000ம், மடப்பள்ளி ஊழியர்களுக்கு ₹10,000ம் சம்பளம் உயர்த்தப்பட்டது. திறமையான தொழிலாளர்களாகக் கண்டறிந்து சம்பளம் உயர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து செயல் அதிகாரி தர்மா பேசியதாவது: தற்போதைய ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களின் வீட்டு மனைகளுக்கு ஊழியர்கள் சார்பில் ₹210 கோடி
வழங்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்கது. பகலியில் உள்ள 350 ஏக்கர் நிலம் விரைவில் கையகப்படுத்தப்பட்டு ஜனவரி இறுதிக்குள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் வீட்டுமனை வழங்கப்படும்.
வடமாலைப்பேட்டை அருகே தற்போது ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீட்டு மனையின் சந்தை மதிப்பு ₹ 40 லட்சமாக எட்டியுள்ளது. அரசு மற்றும் அறங்காவலர் குழுவால் எவ்வளவு நன்மைகள் செய்யப்பட்டுள்ளன என்பதை ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஊழியர்கள் முக்கியமாக பக்தர்களின் சேவைக்காக உழைக்க வேண்டும். உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதால் தங்கள் குடும்பங்கள் வாழ்கின்றன என்பதை உணர்ந்து பக்தர்கள், இறைவனின் சேவையிலும், பணியாளர்களின் சேவையிலும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மூத்த அதிகாரிகள் சங்கம் சார்பில் மக்கள் தொடர்பு அதிகாரி டி.ரவி மற்றும் ஊழியர்கள் பலர் பேசினர். அதன்பின் தலைவர் கருணாகர், செயல் அதிகாரி தர்மா, இணைந்து 3500 தேவஸ்தான ஊழியர்களுக்கு வீட்டு மனை பத்திரங்களை வழங்கினர்.