திண்டிவனம்: திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் மைக்கை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம் நகராட்சியில் நேற்று மாலை நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில், நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டம் துவங்கியதில் இருந்து கவுன்சிலர்கள் அந்தந்த வார்டுகளில் வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சி ஆணையரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு நகராட்சி ஆணையர் பதிலளித்து வந்த நிலையில், அதிமுக கவுன்சிலர் ஜனார்த்தனன் எழுப்பிய கேள்விக்கு நகராட்சி ஆணையர் பதில் அளிக்காததால், மைக்கை ஓங்கி தரையில் அடித்து உடைத்தார். இதனால் நகரமன்ற கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிமுக கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், சரவணன், கார்த்திக், திருமகள் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.