தூத்துக்குடி: தூத்துக்குடி வாழைக்காய் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் வாழைத்தார் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை தொழில் முதன்மையானது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை விவசாயம் நடைபெறும். இந்த ஆண்டு பருவமழை பெய்ததன் காரணமாக வாழை விவசாயத்திற்கு தேவையான நீர் இல்லாத காரணத்தால் சரியான விளைச்சல் இல்லாமல் காணப்படுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி வாழைக்காய் மார்க்கெட்டுக்கு பரமக்குறிச்சி, அம்மன் புரம், காயாமொழி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் வருகின்றன.
செவ்வாழை தார் தேனி மாவட்டத்தில் இருந்து வருகிறது. வழக்கமாக தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு 3000 முதல் 3500 தார்கள் வரக்கூடிய நிலையில் மழை இல்லாத காரணத்தால் 800 முதல் 1000 வாழைத்தார்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி வாழைக்காய் மார்க்கெட்டில் வாழைத்தார்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. செவ்வாழை தார் – ரூ.1000-லிருந்து ரூ.1,400 வரை விலை உயர்ந்துள்ளது. நாட்டுபழத்தார் ரூ.800 முதல் ரூ.1,200 வரை, கோழிக்கூடு, கர்பூரவள்ளி போன்ற வாழைத்தார்கள் ரூ.550 முதல் ரூ.800 வரை விலை உயர்ந்துள்ளது. வாழைத்தார்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் வாழைத்தார்கள் விளைச்சல் இல்லாமல் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.