திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்தில் மழைநீரை அகற்ற 107 மின்மோட்டார், 6 நீர் உறிஞ்சும் லாரிகள் தயார் நிலையில் உள்ளன, என்று பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆணையர் நவேந்திரன் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் பருவமழையின்போது தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகள், தாழ்வான இடங்கள், குடிசைப் பகுதிகள் ஆகியவற்றை அடையாளம் கண்டு அவற்றில் செய்யப்பட வேண்டிய பணிகள், பெருமழையால் பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
கூட்டத்தில் மண்டலத் தலைவர் தி.மு.தனியரசு கூறுகையில், மண்டலம் முழுவதும் மழைநீரை அப்புறப்படுத்த 107 மின் மோட்டார்கள் மற்றும் 6 நீர் உறிஞ்சும் லாரிகள் தயாராக உள்ளன. மழைநீர் கால்வாய் பணிகள் முடிந்த இடங்களில் அவற்றை தூர்வாரி, கொசுத் தொல்லை ஏற்படாமல் இருக்க கால்வாய் மூடிகளில் கொசுவலை கட்டப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு வார்டுக்கும் கூடுதலாக 10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 மரம் அறுக்கும் இயந்திரங்களும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைத்து உணவு வழங்க 10 பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவித்தார்.