சென்னை: சென்னை திருவான்மியூரில் சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூய்மைப் பணியாளர் சிவகாமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “இன்று அதிகாலை சென்னை, திருவான்மியூர், அடையாறு மண்டலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த சிவகாமி (வயது 42) க/பெ. வெங்கடேசன் என்பவர் பணியிலிருந்தபோது அவர் மீது வாகனம் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
ஒக்கியம் துரைப்பாக்கத்திலுள்ள கண்ணகி நகரில் தன் கணவர், மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்த சிவகாமி இந்த சாலை விபத்தில் உயிரிழந்தது நமக்கெல்லாம் பெரும் வேதனை அளிக்கின்றது. அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஐந்து இலட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.