ஜோலார்பேட்டை: படைக்கும் தெய்வமான பிரம்மாவுக்கு உகந்த பூவென பிரம்ம கமலத்தை இந்துக்கள் கூறுவார்கள். இத்தகைய அதிசய பூவின் நடுவில் பிரம்மா படுத்திருப்பது போன்றும், அதன் மேல் நாகம் படம் எடுத்திருப்பது போன்றும் காணப்படும். இந்த பிரம்ம கமலம் பூ, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். இந்த அதிசய பூவின் இலையில் இருந்தே பூ பூக்கிறது. இரவு நேரங்களில் மட்டுமே பிரம்ம கமலம் பூ மலர தொடங்கும். அதனை பார்ப்போருக்கு அதிர்ஷ்டம் கிட்டும் என்பது நம்பிக்கை.
இத்தகைய சிறப்புமிக்க பிரம்ம கமலம் பூச்செடியை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தை சேர்ந்த நீலா என்பவர் தனது வீட்டில் பராமரித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு சென்றபோது அங்கிருந்து பிரம்ம கமலம் பூ செடியை வாங்கி வந்து வளர்க்க தொடங்கினார். இந்நிலையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ, நேற்று நள்ளிரவு பூத்தது. இதனை அந்த குடும்பத்தினர் பூஜைகள் செய்து ஆரத்தி எடுத்து வழிபட்டனர். மேலும் அந்த பூவை பலர் ஆச்சரியத்துடன் பார்க்க திரண்டனர்.