Sunday, May 12, 2024
Home » திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற 10ம் வகுப்பு 3ம் திருப்புதல் தேர்வு வினாத்தாளில் குளறுபடி: மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற 10ம் வகுப்பு 3ம் திருப்புதல் தேர்வு வினாத்தாளில் குளறுபடி: மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி

by Karthik Yash

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி, தொடர்ந்து ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 138 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வை 16,858 மாணவர்களும், 16,572 மாணவிகளும் என மொத்தம் 33,430 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் வகையில் டிசம்பர் மாதம் இறுதி வரையில் பாடப்பிரிவுகளை பூர்த்தி செய்யும் வகையில் திருப்புதல் தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன் பேரில் கடந்த ஜனவரி மாதம் முதல் திருப்புதல் தேர்வும், பிப்ரவரி மாதம் 2வது திருப்புதல் தேர்வும் மார்ச் 3ல் 3வது திருப்புதல் தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டு, முதல் 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. இதில், 3வது திருப்புதல் மார்ச் 4ம் தேதி தொடங்கியது. இதில் 100 மதிப்பெண்களுக்கு கணக்கு தேர்வு நேற்று நடந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2ம் திருப்புதல் தேர்வில் கணக்கு பாடத்தில் கேட்கப்பட்ட மொத்த கேள்விகளும் 3ம் திருப்புதல் தேர்வில் இடம் பெற்றிருந்தன. இதைப்பார்த்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்தாண்டுகளில் நடைபெற்ற ஒரு திருப்புதல் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள், அடுத்த தேர்வில் இடம் பெறாத வகையில் மாற்றம் இருக்கும். தற்போதைய நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் திருப்புதல் தேர்வில் ஒரே மாதிரியான கேள்விகள் இடம் பெற்றதால் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தயார் செய்வதற்காக 5 பேர் கொண்ட குழு தயார் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். அந்தக் குழுவினர் ஒவ்வொரு பாடப்பிரிவுகளும் அனைத்து பாடங்களிலும் கேள்விகள் இருக்கும் வகையில் வினாத்தாள் தயார் செய்வது வழக்கமாகும். ஆனால், திருப்புதல் தேர்விலும் இடம் பெறும் வினாத்தாள்களை கண்காணிப்பு குழுவினர் மற்றும் அலுவலர்களின் சரிபார்ப்பு பணியில் அலட்சியம் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவிகள் தயார் செய்யும் நோக்கத்திலேயே 3 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை எழுதுவோர் பொதுத்தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும். ஆனால், ஏற்கெனவே நடைபெற்ற 2ம் கட்ட திருப்புதல் தேர்வில் இடம் பெற்ற வினாத்தாள், அப்படியே 3வது திருப்புதல் தேர்வில் இடம் பெற்றிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, எங்கு தவறு நடந்துள்ளது என்பதை கண்டறிந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மறுதேரவு நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

You may also like

Leave a Comment

four + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi