புழல்: செங்குன்றம் அருகே உள்ள பொத்தூர் கிராமத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற சுக்கிர பைரவர் திருக்கோயிலில் 48வது நாள் மண்டலாபிஷேக பூஜை விழாவுடன் நிறைவு பெற்றது. செங்குன்றம் அருகே உள்ள பொத்தூர் கிராமத்தில் மிகப் பழமையான அன்னபூரணி அம்மன் உடனுறை ஓதனவனேசுவரர் ஆலயம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக சுக்கிர காலபைரவர் சன்னதியில் கும்பாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து, இச்சன்னதியில் நேற்றுமுன்தினம் 48ம் நாள் மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
தமிழில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் உபயதாரர்கள் பலர் பங்கேற்றனர். இதில் பரிவார தெய்வங்கள் மற்றும் சுக்கிர காலபைரவர் கலச வழிபாட்டுடன் சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன. பின்னர் கலச வழிபாடும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, காலபைரவரின் மூலமந்திரங்களை அடியார் வாசுதேவன் முழங்க, சுக்கிர காலபைரவர் சுவாமிக்கு கலச புனித நீர் அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனையுடன் மண்டலாபிஷேக பூஜைகள் நிறைவு பெற்றன. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.