திருவள்ளூர்: கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முகம் வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகனார் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி சிறந்த பள்ளிகளை தேர்வு செய்வதற்கு முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட அளவிலும், பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில் மாநில அளவிலும் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து தகுதியான 4 பள்ளிகளை தேர்வு செய்து பள்ளிக்கல்வித் துறை வசம் ஒப்படைத்தன.
இதில் 76 பள்ளிகளை சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்து பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் திருவள்ளூர் ஒன்றியம், புட்லூரில் கர்மவீரர் காமராஜரால் தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் பேராசிரியர் அன்பழகனார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்சியில் பேராசிரியர் அன்பழகனார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கர்மவீரர் காமராஜரால் தொடங்கப்பட்ட புட்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரா.தாஸிடம் பேராசிரியர் அன்பழகனார் விருதினை வழங்கினார்.
இதில் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனர் நாகராஜ முருகன் உள்படபட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் பேராசிரியர் அன்பழகனார் விருதினை பெற்றுக் கொண்டு பள்ளிக்கு வருகை தந்த தலைமை ஆசிரியர் இரா.தாஸை பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்கள், அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தும், மாலைகள் சால்வைகள் அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.