பாலக்காடு: பாலக்காடு அருகேயுள்ள பனம்தொடி ஸ்ரீ முனீஸ்வரசுவாமி கோவிலில் தாலப்பொலி திருவிழா வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது.கோவில் தந்தரி பிரம்ம ஸ்ரீ நாராயணசாமி பட்டாச்சாரியர், விக்னேஷராமா பட்டாச்சாரியர் ஆகியோர் தலைமையில் நேற்று காலை 5 மணிக்கு கணபதிஹோமம், பிரம்மரக்ஷஸ் பூஜை, உஷ பூஜை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து சொக்கநாதபுரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர சுவாமி கோவிலிலிருந்து திருமஞ்சனம் எழுந்தருள் பஞ்சாரி மேளத்துடன் நடைபெற்றது. இதனையடுத்து காலை 11 மணிக்கு பூர்ணாபிஷேகம், மகா தீபாராதனை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை ஆகியன நடந்தது.
தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு குமரபுரம் உயர்நிலைப்பள்ளி முன்பாக 3 யானைகள் அலங்காரத்துடன் செண்டை மேளம் அதிர உற்சவமூர்த்தி யானை மீது அமர்ந்து திருவீதி வந்தார். சொக்கநாதபுரம், பனம்தொடி ஆகிய பகுதிகளில் திரளாக பக்தர்கள் பங்கேற்று உற்சவமூர்த்தி வழிபட்டனர். இரவு 7.30 மணிக்கு தாலப்பொலி பாண்டி மேளத்துடன் நடைபெற்றது.