சென்னை: 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு சென்னை, நந்தனம், ஓய்.எம்.சி.ஏ திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தில் ஒன்றிய அரசு மக்கள் தொகை மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 4 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் திருமாவளவன் பேசியதாவது:
வருகிற நாடாளுமன்ற தேர்தல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் தேர்தல். பாஜ ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கிவிடுவார்கள். நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். உடனே திருமாவளவன் திமுகவில் இருந்து விலகுவதாக திட்டமிட்டு வதந்தி பரப்ப ப்பட்டது. இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு விசிக முழுமையாக உழைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.