சென்னை: திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் உள்ள அறிஞர் அண்ணா பூங்காவில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வெண்கல உருவசிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் இடது கை பகுதியில் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு காவி துணியை கட்டிவிட்டு சென்றுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அங்கு சிலை அமைக்கப்பட்ட வளாகம் முன்பு கூடி, இச்சம்பவத்தை கண்டித்தும், இச்செயலை செய்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிந்த நபர் யார் என கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அதிமுக பேரூர் செயலாளர் தினேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். சமீபத்தில் திருப்போரூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் காவி துண்டு அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பதற்றம் தணிவதற்குள் திருக்கழுக்குன்றத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் காவி துண்டு அணிவித்த சம்பவம் அதிமுகவினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.