திருக்கழுக்குன்றம்: வாய்பேச முடியாத சிறுவன் பாலாற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானான். கல்பாக்கம் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் ஹிந்திரகுமார் (13). வாய் பேச முடியாதவர். இவர், நேற்று கடந்த சனிக்கிழமை மதியம் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இவரது உறவினர் மற்றும் நண்பர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.
இந்நிலையில், கல்பாக்கம் அடுத்த புரன்சேரி பாலாற்று பகுதியில் நேற்று முன்தினம் காலை ஒரு சிறுவனின் உடல் கரையில் ஒதுங்கிக்கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அக்கம், பக்கத்தினரிடம் தகவல் கொடுத்ததனர். அதன்பேரில் ஹிந்திரகுமாரின் உறவினர்களும் அங்கு சென்று பார்த்தபோது, இறந்தது கிடப்பது ஹிந்திரகுமார் தான் என தெரிய வந்தது. தகவலறிந்த அணைக்கட்டு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த வாய்பேச முடியாத ஹிந்திரகுமாரின் தந்தை சிங்காரம் பல ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.