கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா பேலாரஹள்ளி அருகே செம்மநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சக்திவேல்(31). எலக்ட்ரீசியனான இவரது மனைவி இந்துமதி(26). இவர்களுக்கு 2 வயதில் மேகவர்ஷினி என்ற மகளும், 3 மாத ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று, சக்திவேல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் டூவீலரில் கந்திகுப்பம் அருகே கொல்ரூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையில், பெரியபனமுட்லு என்னுமிடத்தில் சென்று கொண்டிருந்த போது, ஊத்தங்கரை அருகே காக்கங்கரை பகுதியில் இருந்து, கிருஷ்ணகிரி நோக்கி வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. அப்போது, எதிரே சக்திவேல் வந்த டூவீலர் மீது கார் வேகமாக மோதியது. தொடர்ந்து அந்த வழியாக மற்றொரு டூவீலர் மீதும் மோதியது.
இதில், சக்திவேல் மற்றும் மனைவி -குழந்தைகள், மற்றொரு டூவீலரில் வந்த அஞ்சூரை சேர்ந்த யாசின்அலி(35) ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே யாசின்அலி, குழந்தை மேகவர்ஷினி, 3 மாத ஆண் குழந்தை ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சக்திவேல், இந்துமதி ஆகியோர் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து, கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* பைக்-வேன் மோதல்; தந்தை, மகன் பலி
திருப்பூர் மாவட்டம் உடுமலை சாதிக் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (38), மனைவி மகேஸ்வரி (23), மகள்கள் சுவாதி (14), தர்சனா (2), மகன் தர்ஷன் (4) ஆகியோருடன் கடந்த 26ம் தேதி இரவு உடுமலை மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்றார். பின்னர் பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனர். பைக்கை கோவிந்தராஜ் ஓட்டினார். அப்போது ராஜேந்திரா வீதியில் சென்றபோது, எதிரே வந்த பிக்அப் வேனும், பைக்கும் மோதின. இதில் 5 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 5 பேரும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் தர்ஷன் பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கோவிந்தராஜ் இறந்தார்.