தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகரை சேர்ந்தவர் அன்பழகன் (43). திரைப்படங்களில் ஸ்டண்ட் நடிகராக உள்ளார். இந்நிலையில், படப்பிடிப்புக்காக புதுச்சேரி சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து, அதில் இருந்த ரூ.3 லட்சம், ஒரு சவரன் நகைகள் திருட்டுப்போனது தெரிய வந்தது.
இதுகுறித்து அன்பழகன் புதுவண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டின் சாவி காணமால் போய் உள்ளது. அந்த சாவியை வைத்து, மர்ம நபர்கள் நோட்டமிட்டு திருடி சென்றார்களா என்ற கோணத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.