நா டாளுமன்ற தேர்தல் அரையிறுதி கட்டத்தை எட்டுகிறது. நாடு எப்படி செயல்பட போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் இதற்கு முன் நடந்த தேர்தல்களை விட மாறுபட்டது. ஜனநாயக முறையில் இந்தியா, வீர நடை போட வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தலாக கருதப்படுகிறது. 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 102 இடங்களில் நடந்தது. 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதி 88 தொகுதிகளில் நடந்தது. அடுத்தகட்டமாக 3ம் கட்ட தேர்தல் வரும் மே 7ம் தேதி 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நடக்கிறது.
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜ கூட்டணியில் பொருளாதார மந்த நிலை, உணவு பொருட்களுக்கு கூட ஜி.எஸ்.டி வரி விதிப்பால் கடுமையான விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, கடனில் தத்தளிக்கும் விவசாயிகள், தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லை என்பது உள்பட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து இந்தியா கூட்டணி தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி வந்த பாஜ அரசு, தற்போது அக்கட்சியின் தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை கடுமையாக வசைபாடி வருகின்றனர். அதாவது வரலாற்றுக்கு மாறாக ஓட்டு வங்கிக்காக பேசுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மக்களின் சொத்துக்களை அதிகரிக்க பாஜ வேலை செய்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டை எக்ஸ்ரே செய்யும். உங்களின் சொத்துகள், வங்கி லாக்கர்கள், நிலங்கள், வாகனங்கள், பெண்களின் ஆபரணங்கள், தங்கம், தாலி ஆகியவைகளையும் சோதனை செய்வார்கள். அவர்கள் உங்கள் வீடுகளை சோதனை செய்து சொத்துக்களை அபகரிப்பார்கள் என கர்நாடகா மாநிலம் பெலகாவியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியது அருவறுக்கத்தக்க வகையில் இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் அநியாயங்களை நினைவு கூறமுடியாது. அவுரங்கசீப் நமது பல கோயில்களை அசுத்தப்படுத்தி அழித்தார். அவுரங்கசீப்பை கொண்டாடும் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாக பிரதமர் மோடி, வன்மமாக பேசி உள்ளார்.
அதற்கும் ஒருபடி மேலே சென்று வாக்குகளுக்காக காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்ட தீவிரவாதத்தை ஆதரிக்கும் தேசவிரோத அமைப்பின் ஆதரவை பெற்றுள்ளதாக பிரதமர் பதவிக்கு பொறுப்பு இல்லாமல் மோடி பேசுகிறார். இந்தியா வேகமாக வளர்ந்து வருவதை பொறுக்காத சில நாடுகள், அமைப்புகள் பலவீனமாக மாற்ற முயல்வதாக விஜயநகரா மாவட்டம் ஹொசபேட்டில் பேசுகிறார். இதுவரை அவர் பேசியது அனைத்தும் வாக்கு வங்கிக்காக, ஆனால், அதில் வரலாற்று உண்மைகள் கிடையாது. ஒவ்வொரு பிரசார பொதுக்கூட்டத்திலும் பலவிதமான குற்றச்சாட்டுக்களை கூறி வெறுப்பு அரசியலை திணிக்கும் வகையில் பேசி வருகிறார்.
இதுபோன்று அக்கட்சியின் தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நட்டா உள்பட பல தலைவர்கள் தனிப்பட்ட தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டு ஆட்சியில் செய்த சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்கவில்லை. வெறுப்பு பேச்சு, வாக்கு வங்கியை அதிகரிக்க உதவாது. பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். அதனால் பிரசாரத்தில் தனிப்பட்ட தாக்குதலை தவிர்க்க வேண்டும். வரலாறுகளை திரித்து கூறாமல் வாக்கு சேகரிக்க வேண்டும். வெறுப்பு மற்றும் வன்மமாக பேசுவது பிரதமர் பதவிக்கு அழகல்ல.