திண்டிவனம்: தைலாபுரத்தில் இன்று நடந்த பாமக 35வது ஆண்டுவிழாவில் பேசிய நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மது, புகை இல்லாத தமிழகமாக மாற்றுவதே எனது லட்சியம் என தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் 35வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு இன்று தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கட்சிக்கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து தமிழக முதல்வரிடம் நான்கைந்து முறை பேசி உள்ளேன்.
விரைவில் தமிழக அரசு இது சம்பந்தமாக நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறேன். மது மற்றும் புகையிலை இல்லாத தமிழகமாக மாற்றுவதே எனது லட்சியம். மும்மூர்த்திகள் என்னிடம் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாத தமிழகமாகவும், ஒரு சொட்டு மழைநீர் கூட கடலில் கலக்காமல் இருக்க வேண்டும் என வரம் கேட்பேன். இவ்வாறு அவர் கூறினார்.