ஈரோடு: தீவிரவாத அமைப்புடன் தொடர்பு குறித்து ஈரோடு வாலிபர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்த நில புரோக்கர் மகபூப். இவரது மகன் ஆசிப் முஸ்தாகீர் (28). டைல்ஸ் கற்கள் விற்பனை நிறுவன தொழிலாளி. இவர் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்க்க முயற்சித்தாக புகாரில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளார். சிறையில் இருந்த ஆசிப் முஸ்தாகீர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சின்னத்தை வரைந்ததாக போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில், காட்டூர் போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிப் முஸ்தாகீரை கோவை மத்திய சிறையில் இருந்து ஈரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்து சோதனை நடத்தினர். இது மதியம் 12.10 மணிக்கு துவங்கி 12.40 மணி வரை நடந்தது. அதன்பின் மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு ஆசிப் முஸ்தாகீர் அழைத்து செல்லப்பட்டார்.