*கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்
கொடைக்கானல் : கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ, நகர் பகுதி முழுவதும் பரவி புகை மண்டலமானது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக வறண்ட சூழல் மட்டுமே நிலவி வருகிறது. இந்த வறட்சியான சூழல் காரணமாக கொடைக்கானல் அருகே உள்ள வனப் பகுதிகளில் காட்டுத்தீ அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. வனப்பகுதியையொட்டி உள்ள வருவாய் நிலப்பகுதிகள் மற்றும் தனியார் தோட்டங்களிலும் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.
வனப்பகுதியில் ஏற்பட்டு வரும் காட்டுத்தீ காரணமாக வனப்பகுதியில் உள்ள அரிய மரங்கள் எரிந்து சாம்பலாகி வருகின்றன.
கடந்த சில நாட்களாக காட்டுத்தீ ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள்மலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. பற்றி எரிந்த காட்டுத்தீ காரணமாக இப்பகுதியில் இருந்த மரங்கள் எரிந்து சாம்பலாகின. இந்த காட்டுத்தீ காரணமாக கொடைக்கானல் நகர் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. திடீரென ஏற்பட்ட காட்டு தீயினை கட்டுப்படுத்துவதற்கு வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் போராடி வருகின்றனர்.