புதுடெல்லி: ஏடன் வளைகுடாவில் பற்றி எரியும் இங்கிலாந்து எண்ணெய் கப்பலில் உள்ள 22 இந்தியர்களை மீட்க ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பல் விரைந்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கி 100 நாட்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீடிக்கிறது. இந்த நிலையில், செங்கடலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செல்லும் வணிக கப்பல்களை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஏடன் வளைகுடாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கார்னி போர்கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதேபோல் இங்கிலாந்தை சேர்ந்த எம்.வி.மார்லின் லுவாண்டா எண்ணெய் கப்பல் மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கப்பலில் 22 இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் என 23 பேர் உள்ளனர். எம்.வி.மார்லின் லுண்டா கப்பல் குழுவினர் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர். அதையேற்று தீயணைப்பு மற்றும் மீட்பு சாதனங்களுடன் இந்திய கடற்படையை சேர்ந்த மீட்பு குழுவினருடன் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.