திருமலை: ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடூர் தொகுதியில் மகளிர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் பேசியதாவது: மாநிலத்தை வறுமையில்லா மாநிலமாக்குவதே எனது இலக்கு. பெண்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி பெண்களுக்கான மகாசக்தி திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இதன் மூலம் தெலுங்கு தேச கட்சி ஆட்சி அமைந்தால் ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1800 வழங்கப்படும். தாய்க்கு வந்தனம் திட்டத்தில் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம், தீபம் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். ஆர்டிசி பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம். ஆட்சிக்கு வந்தவுடன் டிட்கோ வீடுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து சர்வே பள்ளியில் நடந்த பிரசாரத்தில் சந்திரபாபு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.