செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த நெம்மேலி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் அமிர்தராஜன் (33). இவர், செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் மகேந்திராசிட்டிக்கு வேலைக்கு சென்றார். பின்னர், வேலை முடிந்து வீடு திரும்பியபோது, திருப்போரூர் கூட்ரோட் சாலையின் தடுப்பு சுவரின் மீது அவரது வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் அமிர்தராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, அமிர்தராஜன் மனைவி சங்கீதா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.