சென்னை: ‘‘தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வரும் 7ம் தேதி அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகளில் பங்குபெற விருப்பமுள்ள வீரர், வீராங்கனைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்’’ என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: 2023-24ம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் சென்னை மாவட்ட அளவில் வரும் 7 தேதி காலை 5.00 மணி அளவில் சென்னை தீவுத்திடலில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்கள் 8 கி.மீ. மற்றும் பெண்கள் 5 கி.மீ. அதேபோல 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்கள் 10 கி.மீ. பெண்கள் 5 கி.மீ. என நடைபெற உள்ளது.
மாவட்ட அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.5000, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.3000, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2000 மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு தலா ரூ. 1000 பரிசும், தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட போட்டியில் பங்கு பெற விருப்பமுள்ள வீரர், வீராங்கனைகள் அனைவரும் வயது சான்றிதழ் மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன் வரும் 5 தேதி வரை நேரு பூங்கா விளையாட்டு அரங்கம் மற்றும் பெரியமேடு, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை முன்பதிவுகள் செய்து கொள்ளலாம்.