சென்னை: முதல்வராக பதவியேற்கும் போது தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக உருவாக்குவேன் என்று கூறினேன் அதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 9 இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வுப் பணிகளையும், புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்னும் திறன் மேம்பாட்டு கல்வி நிறுவனத்தில் படித்து முடித்த மாணவ மாணவியருக்கு மடிகணினிகளையும், தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு மோட்டார் தையல் இயந்திரங்களையும் வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிடத்தின் அடிப்படை நோக்கமே கல்வி, வேலைவாய்ப்பில் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும் என்பதே.
வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். கல்வி கற்க எந்த தடையும் இருக்க கூடாது. அதற்கு எந்த தடை இருந்தாலும் அதை தகர்த்தெரிய வேண்டும். அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்பது நான் முதல்வராக பொறுப்பேற்கும் முன்பு , திமுக எதிர்கட்சியாக இருந்தபோதே தொடங்கியது. மருத்துவம் படித்து மக்களுக்கு தொண்டாற்ற விரும்பியவர் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த சகோதரி அனிதா. மருத்துவம் பயில முடியாத ஏக்கத்தில் அவர் உயிரிழந்தார். எனவே தான் இந்த திறன் மேம்பாட்டு மையத்திற்கு அவரது பெயரை வைத்தோம்.
மேலும், 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29 பெண்களுக்கான பயிற்சி மையமாக தொடங்கினோம். இதுவரை 8 பேட்ச்களின் 662 மாணவிகள் இலவச பயிற்சி முடித்து டேலி சான்றிதழும் மடிக்கணினியும் பெற்றுள்ளனர். 4 பேட்ச் மூலம் 37 மாணவர்கள் சான்றிதழும் மடிக்கணினியும் பெற்றுள்ளனர். அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மூலம் இதுவரை 969 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. 1100-க்கும் மேற்பட்ட மகளிருக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இம்மையத்திற்கு கிடைத்துள்ள வெற்றி நம் எண்ணத்திற்கு கிடைத்துள்ள வெற்றி.
இந்த அரசு சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆட்சியின் சாதனைகளை சொன்னால் நேரம் போதாது. இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகத்தை கொண்டுவர அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும் என ஆட்சி பொறுப்பேற்றவுடன் சொன்னேன். நம்பர் 1 முதல்வர் என பாராட்டை பெற்றாலும், நம்பர் 1 தமிழ்நாடு எனும் சூழலை உருவாக்குவேன் என்று கூறினேன். அந்த சூழல் இப்போது வந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.