சென்னை: தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வானிலை நிலவரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
“செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் முதல் விழுப்புரம் மாவட்டம் மாரக்காணம் வரை கனமழை பெய்துது.
நேற்று மரக்காணத்தில் 133 மில்லி மீட்டர் மழையும் இன்று 194 மில்லி மீட்டர் மழையும் சேர்ந்து மொத்தம் 327 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
செய்யூர் மற்றும் மதுராந்தகத்தில் முறையே 226 மில்லி மீட்டர், 220 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
மழை தற்போது தெற்கு மற்றும் மேற்கு தமிழ்நாடு பகுதிகளுக்கு நகரும். தென் தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யும். தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்யும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மலைகளில் வழக்கம் போல் கனமழை பெய்யும். கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். டிசம்பரில் பெய்த அளவுக்கு மழை இருக்காது, மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன் பின்னர் இந்த மழை குறையலாம். வியாழக்கிழமை முதல் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். வறண்ட வானிலையுடன் பொங்கல் கொண்டாடலாம்.” என்றார்.