சென்னை: இந்தியாவில் முதன்முறையாக 10,000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது. இதுதொடர்பாக உறுப்பு தான திட்டத்தின் முதல் இயக்குனர் அமலோற்பவநாதன் கூறியதாவது: தமிழகத்தில் முதன்முதலாக 2008ம் ஆண்டு கலைஞர் தலைமையில் உறுப்பு மாற்று திட்டத்தை அரசு உருவாக்கி வெற்றிகரமாக நடத்தியது. இந்த சிகிச்சையை மற்ற மாநிலங்களில் இருந்து மருத்துவர்கள் வந்து கற்று சென்றனர். ஒன்றிய அரசில் உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் தமிழக விதிமுறைகளை தழுவி உருவாக்கப்பட்டது. இப்படி இந்தியாவுக்கு வழிகாட்டிய இந்த திட்டத்தில் இதுவரை 1,673 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். 10,003 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 10,000 பேர் உயிர் பிழைத்து இருப்பதற்கு கலைஞர் காரணம் என்பதை அவரது 5ம் ஆண்டில் நன்றியுடன் நினைத்து பார்க்க வேண்டும்.
இந்த திட்டத்தின் ஆரம்ப காலத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டது. அதிகமாக தனியார் மருத்துவமனையில் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அது சில வருடங்களில் மாற்றப்பட்டது. அரசு மருத்துவமணையில் ஏழைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என முயற்சி எடுத்து செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் நடந்து வருகிறது. மற்ற மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து குழந்தைகள் வந்து இதய மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக சிரிப்புடன் சென்று உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.