சென்னை: தமிழகத்தில், அக்டோபர் மாதம் ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 842 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் கோபால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர், உடந்தையாக செயல்படுவோர் மீது வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 01.10.2023 முதல் 31.10.2023 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.21,97,070 மதிப்புள்ள 3474 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 289 எரிவாயு உருளைகள், 691 கிலோ கோதுமை, 230 கிலோ துவரம் பருப்பு, 660 லிட்டர் மண்ணெண்ணெய், 440 பாக்கெட் பாமாயில், சர்க்கரை 20 கிலோ ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 161 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 842 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேஷன் பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் 18005995950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.