மக்களவைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பாகவும் சுயேச்சையாகவும் 138 குற்றப் பின்னணி வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் போட்டியிடுவதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதியில் 945 வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பாகவும் சுயேச்சைகளாகவும் போட்டியிடுகிறார்கள். அதிமுக சார்பில் போட்டியிடும் 34 வேட்பாளர்களில் 12 பேரின் மீது 35% கிரிமினல் வழக்கு உள்ளது. அதில் 6 பேரின் மீது 18 சதவீதம் அளவிற்கு தீவிர கிரிமினல் வழக்கு உள்ளது.
பாஜ சார்பில் போட்டியிடும் 23 வேட்பாளர்களில் 16 பேரின் மீது 70 சதவீத அளவிற்கு கிரிமினல் வழக்குகளும், அதில் ஒன்பது வேட்பாளரின் மீது 39 சதவீதம் அளவிற்கு தீவிர கிரிமினல் வழக்குகளும் உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் அதில் 11 பேர் மீது 28 சதவீத அளவிற்கு கிரிமினல் வழக்கும், 6 வேட்பாளர்களின் மீது 15 சதவீத அளவிற்கு தீவிர கிரிமினல் வழக்கும் உள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் 6 பேர் மீது 60 சதவீத கிரிமினல் வழக்கும், 4 வேட்பாளர்கள் மீது 40% அளவிற்கு கிரிமினல் வழக்கும் பதிவாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களில் 7 பேர் மீது 11 சதவீத அளவிற்கு கிரிமினல் வழக்கும் ஒருவரின் மீது 11% அளவிற்கு தீவிர கிரிமினல் வழக்கும், தேமுதிக சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள் 2 பேர் மீது 40% வழக்கும் அதில் ஒருவரின் மீது 20 சதவீதம் அளவிற்கு கிரிமினல் வழக்கும் உள்ளது. தொடர்ந்து திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜ கூட்டணி, சுயேச்சைகள் 945 பேரில் 138 பேரின் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாகவும், 81 வேட்பாளர்களின் மீது அதிதீவிர கிரிமினல் வழக்கு இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
தேர்தலில் வசதி படைத்தவர்கள் தான் அதிக அளவில் போட்டியிடுகிறார்கள் என்பதற்கு முன்னுதாரணமாக இந்த தேர்தலில் அதிமுக சார்ந்த 34 வேட்பாளரில் 33 வேட்பாளர்கள் 97 சதவீதம் அளவிற்கு பணக்காரர்கள் பட்டியலில் இருப்பதாகவும், பாஜ சார்ந்த 23 வேட்பாளர்களில் 22 பேர் 96 சதவீதம் அளவிற்கு சொத்துக்கள் வைத்திருப்பதாகவும், திமுக சார்ந்த 22 வேட்பாளர்களின் 21 பேர் 95 சதவீதம் அளவிற்கு சொத்துக்கள் வைத்திருப்பதாகவும், நாம் தமிழர் கட்சி சார்ந்த 39 வேட்பாளர்களில் 15 பேர் 38 சதவீதம் அளவிற்கு சொத்துக்கள் வைத்திருப்பதாகவும், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களில் 8 பேர் 89 சதவீதம் அளவிற்கு சொத்துக்கள் வைத்திருப்பதாகவும், பாமகவின் 10 பேரில் 7 பேர் 70% அளவிற்கு சொத்துக்கள் வைத்திருப்பதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கு 50 சதவீதம் அளவிற்கு சொத்துக்கள் இருப்பதாகவும், தேமுதிக சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களில் மூன்று பேருக்கு 60 சதவீதம் அளவிற்கு சொத்து இருப்பதாகவும் இதுபோன்று 202 வேட்பாளர்கள் 21 சதவீதம் அளவிற்கு சொத்துக்கள் வைத்துள்ளனர்.
அதிமுகவின் ஈரோடு வேட்பாளருக்கு ரூ.602 கோடி அளவிற்கு சொத்து இருப்பதாக தனது வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளார். பாஜ சார்பில் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிடும் தேவநாதன் யாதவ் ரூ.304 கோடி அளவிற்கும், ஏ.சி.சண்முகம் ரூ.152 கோடி அளவிற்கு வருவாய் வருவதாகவும் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளனர். அதே போன்று வேலூரில் போட்டியிடும் பாஜ வேட்பாளருக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி வருவாய் வருவதாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆண்டிற்கு ஐந்து கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் வருவதாகவும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர்.
945 வேட்பாளர்களில் பட்டதாரிகள் 92 பேரும், தொழில்முறை பட்டதாரிகள் 177 பேரும், முதுகலை பட்டதாரிகள் 164 பேரும், முனைவர் பட்டம் பெற்றவர் 20 பேரும், படித்தவர்கள் 52 பேரும் போட்டியிடுகின்றனர். 25 முதல் 30 வயதில் உள்ளவர்கள் 74 பேரும், 51 வயதிலிருந்து அறுபது வயதில் உள்ளவர்கள் 202 பேரும், 31 முதல் 40 வயதில் உள்ளவர்கள் 251 பேரும், 41 முதல் 50 வயது 285 பேரும், 81 வயது உள்ளவர்கள் மூன்று பேரும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் 868 ஆண் வேட்பாளர்களும், 77 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.