சென்னை: மதிமுக பொதுசெயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக நேர்மையாளரான முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது. சைலேந்திர பாபுக்கு அந்தத் தகுதி இல்லை என்று தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ரவி நிராகரித்திருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமான சர்வதிகார முடிவாகும். தமிழக அரசு செய்கின்ற பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய பாஜ அரசின் ஏஜென்டாகச் செயல்படுகின்ற தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.