சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியில் இருந்து, வங்கக் கடலில் மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் கடந்த 14ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த மீன்பிடி வலை, படகுகளை சேதப்படுத்தி அபகரித்துள்ளனர். இலங்கை கடற்படையின் அத்துமீறல்களும், தாக்குதலும் நிறுத்தப்படுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவதையும், அவர்களது வலைகளும், படகுகளும் உடைத்து சேதப்படுவதையும் பாஜ ஒன்றிய அரசு மவுன சாட்சியாக வேடிக்கை பார்த்து வருகிறது. மீனவர் நலனை பாதுகாக்காத பாஜ ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் தமிழக மீனவர்களை விடுவித்து அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.