சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்துக்காக 2018 ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒப்பந்தம் போட்டு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசினார். கடந்த 2019 மே மாதமே படம் வெளியான நிலையில் சம்பளத்துக்கான டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால் 2019-20, 2020-21ம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகையை தனது வங்கிக் கணக்கில் இருந்து வருமான வரித்துறை வசூலித்தது.
எனவே, அந்த தொகையை திரும்ப வழங்குமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, சிவகார்த்திகேயனுக்கும், ஞானவேல்ராஜாவிற்கும் இடையில் சுமுக தீர்வு ஏற்பட்டது. டிடிஎஸ் தொகை செலுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிவகார்த்திகேயனுக்கு திரும்ப வழங்க வேண்டிய 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வட்டியுடன் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.