தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. இதனால் மக்கள் மதிய நேரங்களில் வெளியில் போவதை முழுமையாக தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது மக்கள் மனதில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.