மண்டியா: மண்டியா மாவட்டம் கேஆர்எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாய சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பை கண்டித்து ஆக.21ம் தேதி (நேற்று) மண்டியா மக்களவை சுயேச்சை உறுப்பினர் சுமலதா அம்பரீஷ் தலைமையில் போராட்டம் நடத்துவதாக இருதினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், மண்டியா சஞ்சய் சர்க்கிளில் நேற்று பாஜ கட்சியினர், விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதில், மண்டியா எம்.பி சுமலதா, பாஜவை சேர்ந்த மைசூரு-குடகு எம்.பி மக்களவை உறுப்பினர் பிரதாப்சிம்ஹா, முன்னாள் அமைச்சர் அஷ்வத்நாராயண உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, பிரதாப்சிம்ஹா பேசியதாவது: கர்நாடக விவசாயிகளின் நலனை மறந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதை மறைக்க மாநில அரசு இல்லாத குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. நம்முடைய விவசாயிகளின் பயிர்களுக்கு தண்ணீர் விடாமல் எப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடுகிறார்களோ தெரியவில்லை. என்றார். இதற்கிடையில், மைசூரு, நஞ்சன்கூடு, மளவள்ளி, மத்தூர், டி.நரசிபுரா உட்பட பல இடங்களில் மாநில அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.