சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை:
தமிழ்நாட்டில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மாணவர்களுக்கான உதவித் தொகைகள், ஊக்கத்தொகைகள் தடையில்லாமல் சென்று சேர்வதற்காக ‘நேரடி பயனாளர் பரிவர்த்தனை’ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதை எளிமைப்படுத்தும் வகையில் 2024-25ம் கல்வி ஆண்டில் 6ம் வகுப்பில் சேரும் மணவர்கள் அனைவருக்கும் அந்தந்த பள்ளிகள் மூலமாகவே வங்கிக் கணக்குதொடங்கும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. ஆதார் பதிவை வங்கிக் கணக்குடன் இணைக்கும் பணியும் மேற்ெகாள்ளப்படும். இதனால் பெற்றோர் சிரமம் குறைக்கப்படும். மாணவர்கள் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போதும் பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் போதும், வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போதும் சாதிச் சான்று, வருவாய் சான்று, இருப்பிடச் சான்று, முதல் தலைமுறை பட்டதாரிசான்று என நான்கு வகை சான்றுகள் தேவைப்படுகின்றன. இந்த சான்றுகளை தற்போது அரசு இ-சேவை மையங்களின் மூலம் விண்ணப்பித்து பெற்று வருகின்றனர்.
இந்த சிரமத்தை குறைக்கும் வகையில் மணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே, வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பில் சேரும்போதே தேவையான ஆவணங்களை பள்ளித்தலைமை ஆசிரியர் பெற்று பள்ளி மேலாண்மை தகவல் முறைமை தளத்தில் உள்ளீடு செய்து வருவாய்த்துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய மாணவர்களிடம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.