சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கும் மாணவர்களுடன் தமிழ்நாடு தரிசனம் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது: பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் படிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டிற்கு வருவதற்கும், தமிழக மக்களை சந்திப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது உங்களுக்கு முதன்மையான அனுபவமாக இருக்கும். தமிழ்நாடு இந்தியாவின் ஆன்மா. ஆன்மிகம் மற்றும் கலாசார தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதனால் தான் காசியில் இருக்கும் உங்களை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. தமிழ்நாடு ஆன்மிக, கலாசாரம், இயற்கை வளம் என அனைத்து வளங்களையும் மிகுதியாக பெற்று இருந்தது. பின்னர் ஆங்கிலேயேர் காலத்தில் அவை மெல்ல மறைந்தது. தமிழின் பழமைக்கு இணையாக தமிழை நெருங்கும் மொழி ஏதாவது இருக்கும் என்றால் அது சமஸ்கிருதம் தான். தமிழின் இலக்கியங்களில் உள்ள உயரிய கருத்துகள் அற்புதமானது. திருக்குறள் ஆழமாக படிப்பதன் மூலம் சிறந்த மனிதர்களாக உருவாக முடியும்.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi