Friday, May 17, 2024
Home » ஜவுளித்துணி, ஆயத்த ஆடை, தோல்பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவில் தமிழ்நாடுதான் தலைசிறந்த மாநிலம்

ஜவுளித்துணி, ஆயத்த ஆடை, தோல்பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவில் தமிழ்நாடுதான் தலைசிறந்த மாநிலம்

by Ranjith

* ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகளை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகளே தமிழ்நாடு பெரும்பாலான முக்கிய துறைகளில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது என்றும், இது திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி என்று திமுக கூறியுள்ளது. திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுக காணாமல் போய்விடும் என்று கூறிய பிரதமர் என்னும் “பெரிய பதவியில்” உள்ளவர் திமுகவின் வரலாறு தெரியாமல் சில நாள்களுக்கு முன் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து வாய்ஜாலம் காட்டினார்.

அவர் தலைமையில் இதுவரை இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் ஆய்வு அமைப்புகள் தமிழ்நாட்டின் உண்மை நிலையினை விளக்கி ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்குமுன் 7 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலம் என்பதை ஒன்றிய அரசின் ஆய்வு அமைப்புகள் வெளியிட்டன. தற்போது, மேலும் 3 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலம் என்பதை தம்முடைய ஆய்வு அறிக்கைகளின் மூலம், அறிந்தும் அறியாமல் புரிந்தும் புரியாமல் இழித்தும் பழித்தும் திமுகவை பற்றிப் பேசிக் கொண்டிருக்கக் கூடிய “பெரிய பதவியில்” உள்ளவர்களுக்கு மீண்டும் எடுத்துச் சொல்லிப் புரிய வைத்துள்ளன.

ஜவுளித் துணிகள் ஏற்றுமதி குறித்து 2022-23ம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசின் நிர்யாத் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் தேசிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஜவுளித் துணிகளின் மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 22.58 சதவீதம் என அறிவித்து ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 35.38 பில்லியன் அமெரிக்க டாலர் இதில் முதலிடம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 7.990 பில்லியன் அமெரிக்க டாலர்.

அடுத்து இரண்டாம் இடத்தில் குஜராத் மாநிலம் 4.378 பில்லியன் அமெரிக்க டாலர். மூன்றாம் இடத்தில் மகாராட்டிரம் 3.784 பில்லியன் அமெரிக்க டாலர் என்று குறிப்பிட்டு தமிழ்நாடு ஏற்றுமதி செய்து ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. 2022-23ம் ஆண்டுக்கான தேசிய இறக்குமதி ஏற்றுமதி வர்த்தக ஆண்டாய்வு பதிவுகள் குறித்த அறிக்கையில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறித்து அறிவித்துள்ள புள்ளி விவரங்களில் இந்தியாவிலிருந்து ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு மிக அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளின் மொத்த மதிப்பு 16.19 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில் 5.30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலம் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு அடுத்து கர்நாடகம் இரண்டாம் இடத்தில் 4.52 பில்லியன் அமெரிக்க டாலர். உத்தரபிரதேசம் மூன்றாம் இடத்தில் 2.27 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது. மராட்டியம், குஜராத் மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டுக்கான தோல் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு குறித்து ஒன்றிய அரசின் நிர்யாத் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு 2022-23ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள தோல் பொருட்களின் மொத்த மதிப்பு 4.27 பில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறியுள்ளது. அதே நேரத்தில், இதில், 43.20 சதவித தோல் பொருட்களை அதாவது 2.048 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தோல் பொருட்களை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலம் எனும் பாராட்டு முத்திரையை வெளியிட்டு தமிழ்நாட்டின் பெருமையைத் தரணிக்குப் பறைசாற்றியுள்ளது.

இப்படி ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகளே தமிழ்நாடு பெரும்பாலான முக்கிய துறைகளில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றன. பாஜ ஆளும் மாநிலங்கள் பல்வேறு துறைகளிலும் பின்தங்கியிருப்பது மட்டுமல்லாமல், எவ்வித வளர்ச்சியுமின்றி குன்றியுள்ளதையும் இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதிமுக ஆட்சிக் காலத்திலும் கூட தமிழ்நாடு வளர்ச்சியும் முன்னேற்றமும் இன்றி மிகவும் பின்தங்கி இருந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஒன்றிய அரசின் பிரதமரும், ஒன்றிய அரசின் அமைச்சர் பெருமக்களும், பாஜவுடன் கள்ள உறவு வைத்துள்ள அதிமுகவினரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிகளைப் பற்றிக் குறைகூறி வருவது உண்மைக்கு மாறானது மட்டுமல்ல. உண்மைகளை மறைத்து பொய்களைக் கூறி, போலியான விளம்பரம் தேடுபவர்கள் என்பதை தெள்ளத்தெளிவாகப் பொதுமக்களுக்கு ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

20 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi