‘‘தேசிய கட்சியின் வேட்பாளர்களுக்கு தாய்மொழியில் பிரசாரம் செய்ய ஆளே இல்லைன்னு நொந்துபோயிருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளை ஆதரித்துப்பேச மாநில அளவில் தலைவர்கள் இருக்காங்க.. இவங்க வாக்காளர்களிடம் தமிழ்மொழியான தாய்மொழியில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்து வர்றாங்க.. ஆனால் தேசிய கட்சியினர் தேர்தலில் நின்றாலும் அவர்கள்தான் தொகுதியை சுற்றிச்சுற்றி வலம் வருகின்றனராம்.. இது மக்களுக்கும் போரடிச்சுப்போச்சாம்.. அந்த கட்சியின் மாநில தலைவரான மலையானவர் தனது தொகுதியை பார்த்துக் கொண்டு ஒதுங்கிக்கொள்ள, இந்தியில் பேசும் மோடியும், அமித்ஷாவும் தான் பிரசாரத்திற்கு வந்து கையசைக்கின்றனராம்..
அதுவும் அமித்ஷா தென்காசிக்கு இருமுறை புரோகிராம் போட்டும் தொகுதிக்கே வராமல் ஒதுங்கி விட்டாராம்.. சீட் கிடைச்சு போச்சு, விருது வாங்கி விடுவோம் என்ற மகிழ்ச்சியில் மனைவியை களத்தில் இறக்கிய நடிகரும் கலங்கி நிற்கிறாராம்.. அல்வா தொகுதிக்கு முன்பு வந்த போது மோடி என்ன பேசினார் என்பது கூட்டத்தில் வந்த பலருக்கும் தெரியாது. மொழி பெயர்ப்பும் பிசுபிசுத்துப் போச்சாம்.. இந்நிலையில் 2வது முறையாகவும் மோடி வருகிறார். என்ன பிரசாரம் செய்யப் போகிறார் என காத்திருக்கின்றனர் தேசிய கட்சியினர். வைட்டமின் ‘ப’ வை நம்பி மட்டும் தான் களத்தில் நிற்கிறார்களாம்.. தமிழ்நாட்டில் பிரசாரத்திற்கு தமிழ் மொழியில் பேசும் தலைவர்கள் இல்லாமல் தேர்தல் பரீட்சையில் எப்படி நீந்தி கரை சேரப் போகிறோம், டெபாசிட்டாவது தேறுமான்னு தேசிய கட்சி வேட்பாளர்கள் கவலையில் இருக்கின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பிரசாரத்துக்கு போன இடத்துல மீம்ஸ்சுக்கு பயந்தாலும் அன்புக்கு கட்டுப்பட்ட தெர்மாகோல்காரர் கதை தெரியுமா?..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர் இலைக்கட்சியின் மாஜி மந்திரியான தெர்மாகோல், வடமாநில வணிகர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து இலை வேட்பாளருக்கென ஆதரவு திரட்டினாராம்.. அப்போது அவருக்கு கழுத்தில் கோர்த்த பாசி மணிகள், பின்னிய நூலிலான கலையுணர்வுடன் செய்த மாலைகளுடன், தலையில் வண்ண தலைப்பாகையும் அணிவிச்சிருக்காங்க.. ‘ரொம்ப வித்தியாசமா இருக்கு. இதை வச்சு என்னை காமெடி பண்ணிடுவாங்க.. இதை எடுத்து விடலாமா?’ என்று நிர்வாகிகளிடம் கெஞ்சிக் கேட்டும், ‘கிளம்பிச் செல்லும்வரை கழட்டக்கூடாது… நல்லா இருக்காது’னு சொல்லி விட்டாங்களாம்.. இந்நிலையில் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த தெர்மாகோல், ‘யாரும் கிண்டல் பண்ணிடாதீங்க.. மீம்ஸ் போட்டுடுவீங்க.. வேணாம்.. அன்புக்கு கட்டுப்பட்டுத்தான் இதை மாட்டிக்கிட்டேன்’னு கெஞ்சிக் கேட்டுக் கொண்டாராம்.. ‘வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் போட்டு மாட்டிக்கிட்டதிலிருந்து அண்ணன் ரொம்ப உஷாராயிட்டாருங்க.. அதான்’னு சக கட்சியினரின் கமெண்ட் சத்தமும் மெலிதாக காதில் விழுந்தது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மெடல் நகரில் தாமரை கட்சி சார்பில் போட்டியிடும் பிரபல நடிகையானவர், தனது பிரசாரத்தை முருகனின் முதல்படை வீட்டில்தான் துவக்கினார். ஆனால் தற்போது தூங்கா நகர் தொகுதி பொறுப்பாளர்களின் பொறுப்பற்ற செயலால் தூக்கமின்றி தவிக்கிறார்.
முதல்படை வீடு தொகுதி பொறுப்பாளர்கள் எந்த வேலையும் செய்வதில்லையாம். ஆனால், பரபரப்பா வேலை பார்த்தாக கூறி, பில் மட்டும் அனுப்பி வைத்து வசூல் மட்டும் நடத்துகின்றனராம்.. இதுபற்றி கணக்கு பார்த்து, நாட்டாமை கேட்டதற்கு, ‘இதெல்லாம் இங்க சகஜம். கண்டுக்காதீங்க…’ என கூறுகின்றனராம்.. இதனால் நாட்டாமை கலங்கி நிற்கிறார். மெடல் தொகுதியில் சில நிர்வாகிகள் எதிர் முகமான இலைக்கட்சியுடன் மறைமுக கூட்டணி அமைத்து வேலை செய்யாமல் போக்கு காட்டுறாங்களாம்.. இதுகுறித்து தேசிய, மாநில தலைமைக்கு தகவல் சென்றுள்ளது. விசாரித்ததில், மெடல் தொகுதியில் போட்டியிட விரும்பிய 2 பேரில், ஒருவர் தற்போது தூங்காநகர் தொகுதியில் போட்டியிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
மற்றொருவர் மெடல் தொகுதியில் டெல்லி அணி என்ற பெயரில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர்கள்தான் காரணமென தகவல்கள் கிடைச்சிருக்காம்.. எது எப்படியோ உள்குத்து ஒரே தொகுதியிலும் இருக்கிறது. அடுத்த தொகுதியிலும் இருக்கிறதே என நாட்டாமை வட்டாரம் புலம்பி தவிக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வெயிலூர் தொகுதி இலைக்கட்சியினர் வேதனையில் புலம்பற கதை தெரியுமா?’’ எனக்கேட்டார் விக்கியானந்தா.
‘‘சில மக்களவை தொகுதிகளுக்கு மட்டுமே இலைக்கட்சி தலைமையில இருந்து பசை காண்பிக்கப்பட்டுள்ளதாம்.. பல தொகுதிகளுக்கு பசையே காண்பிக்கவில்லையாம்.. அது மட்டுமல்லாமல், கரன்சிகளை அள்ளி கொடுத்தவங்களுக்கு மக்களிடம் எந்த அறிமுகமும் இல்லாவிட்டாலும்கூட சீட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.. இதுபோலதான் வெயிலூர் மக்களவை தொகுதியிலும் நடந்திருக்கு.. இதற்கு முழு காரணம் வீரமான மாஜி அமைச்சர்தானாம்.. இப்போ வெயிலூர் தொகுதிக்கு எந்தவித பசையும் தலைமையில இருந்து காட்டாததால, இலைக்கட்சியினர் கடும் அதிருப்தியில இருக்காங்களாம்.. வேட்பாளரும், அவரை களத்தில் நிறுத்திய வீரமானவரும் என்ன செய்கிறார்கள் என்பதே தெரியவில்லையே என புலம்பல் சத்தம்தான் கேட்குதாம்… இலைக்கட்சி வேட்பாளர் வாணியம்பாடியும், ஆம்பூரும் மட்டும்தான் மக்களவை தொகுதியில வருதுன்னு நெனைச்சிட்டு இருக்காரு போல, அந்த பக்கமே சுத்திட்டு இருக்காருன்னு கட்சியினரே பேசிக்குறாங்க.. இதுல வேட்பாளரு சொந்த ஊருல நடந்த பிரசார கூட்டத்துல 35 பேர் மட்டுமே கலந்துகிட்டதுதான் அனைவரையும் அதிர வச்சிருக்கு.. இப்போ எத வச்சு வாக்காளர்களிடம் ஓட்டு கேட்குறது, இந்த விஷயம் எல்லாம் நம்ம தலைவருக்கு தெரியுமான்னு கட்சியினர் அடுக்காக கேள்விகளை எழுப்புறாங்களாம்.. தேர்தலுக்கு முன்னாடியே கட்சி தாவி இருந்தா ஏதாவது பயன் கிடைச்சிருக்கும்..
இப்போ நட்டாத்துல விட்டுடாங்களே, தேர்தலுக்கு அப்புறம் வெயிலூர், மிஸ்டர் பத்தூர் மாவட்டங்கள்ல இலைக்கட்சி நிர்வாகிங்க யாரும் வெளிய தலைகாட்ட முடியாதுன்னு வேதனை தெரிவிக்கிறார்களாம்.. இல்ல தெரிஞ்சே மவுனம் காக்கிறாரா, எதை வைத்து வாக்காளர்களிடம் வாக்கு கேட்பது. இது, ‘ஒத்தை விரலால் ஓங்கி அடிப்போம்’னு சொல்ற நம்ம தலைவருக்கு தெரியுமா?’ என வேதனையில் புலம்பி வருகிறார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.