டெல்லி: நாடு முழுவதும் சுங்கக்கட்டண உயர்வை அறிவித்திருந்த ஒன்றிய பாஜக அரசு தேர்தல் நேரம் என்பதால் திடீரென கட்டண உயர்வை நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான சுங்கக்கட்டண உயர்வை அறிவித்ததேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயரக்கூடும் என்று சுங்கச்சாவடிகளின் பட்டியலையும் வெளியிட்டது.
குறிப்பாக தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீத கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளை கடந்த 32 சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்காமல் புதிய சுங்கச்சாவடிகளை திறப்பதோடு கட்டணத்தையும் உயர்த்திவரும் ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது.
தேர்தல் நேரத்தில் சுங்கக்கட்டண விவகாரத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை பெறவேண்டுமா என ஒன்றிய பாஜக அரசு யோசித்த நிலையில் கட்டண உயர்வு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது ஒன்றிய பாஜக அரசின் தேர்தல் நேர நாடகம் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் பழைய கட்டணமே தொடர்ந்து வசூலிக்க படுவதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் சுங்கச்சாவடிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.