சேலம்: சேலத்தில் பெண் குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரத்தில் சைபர் கிரைம் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் டவுன் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், வீராணம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், அந்த பெண்ணின் செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர், நீ மருத்துவமனையில் குளிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ, என்னிடம் உள்ளது என கூறியதுடன், அவரது செல்போனுக்கு அந்த வீடியோவையும் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அந்த பெண் அதிர்ச்சிக்குள்ளானார். பின்னர், மீண்டும் வேறொரு செல்போன் நம்பரில் இருந்து பேசிய அந்த நபர், தான் அழைக்கும் இடத்திற்கு வர வேண்டும் என தெரிவித்தார்.
இதுபற்றி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 2 செல்போன் நம்பரையும் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். துணை கமிஷனர் லாவண்யா, உதவி கமிஷனர் வெங்கடேசன் ஆகியோர் சைபர் கிரைமிற்கு சென்று, குறிப்பிட்ட செல்போன் நம்பர் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் சில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. மருத்துவமனையில் அந்த பெண்ணின் கணவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் பக்கத்து அறையில் தங்கியிருந்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.