Saturday, June 1, 2024
Home » நடத்தை சந்தேகத்தால் கொட்டும் மழையில் மனைவியை குத்தி கொலை செய்த கணவன்: பிடிக்க முயன்ற எஸ்ஐக்கும் வெட்டு

நடத்தை சந்தேகத்தால் கொட்டும் மழையில் மனைவியை குத்தி கொலை செய்த கணவன்: பிடிக்க முயன்ற எஸ்ஐக்கும் வெட்டு

by MuthuKumar

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்த விஜயாவு(20)க்கும், தியாகதுருகம் அடுத்த பல்லக்கச்சேரி கிராமத்தை சேர்ந்த முருகன்(25) என்பவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. திருமணத்துக்கு பின்னர் 3 மாதங்கள் மட்டுமே இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதன்பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயா மோ.வன்னஞ்சூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். எனினும் தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி விஜயாவை பலமுறை முருகன் அழைத்துள்ளார். ஆனால் விஜயா முருகனுடன் செல்ல மறுத்து தனது தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த முருகனின் உறவினர் மாயவன் என்பவருடன் விஜயாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், இதனை முருகன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.  ஆனாலும் விஜயா தொடர்ந்து மாயவனுடன் தனிமையில் சந்தித்து பேசி வருவதாக முருகனுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அவர் நேற்று மோ.வன்னஞ்சூர் கிராமத்திற்கு செல்ல கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த விஜயாவை சந்தித்து முருகன் தகராறு செய்துள்ளார். அப்போது எனது சித்தி மகன் மாயவனுடன் நீ எப்படி பழகலாம் என கூறி சண்டை போட்டுள்ளார். அப்போது அவரை எனக்கு பிடித்திருக்கிறது. மாயவனை நான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என விஜயா கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதனையடுத்து நேற்று மாலை கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் இருந்து மோ.வன்னஞ்சூர் கிராமத்திற்கு தனியார் மினி பேருந்தில் விஜயா சென்றுள்ளார். அதே மினி பேருந்தில் முருகனும் சென்றுள்ளார்.

அப்போது மோ.வன்னஞ்சூர் கிராமத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால் பஸ்சில் இருந்து இறங்கிய விஜயா மெயின்ரோடு அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஒரு கடையில் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவை சரமாரியாக குத்தியுள்ளார். வலி தாங்காமல் அவர் கூச்சலிட்டதால் பொதுமக்கள் அங்கு ஓடிவந்தனர். ஆனாலும் ெவறிதீராத முருகன் கத்தியால் குத்தியதால் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து விஜயா உயிரிழந்தார்.

இதனையடுத்து கிராம மக்கள் ஒன்று திரண்டு முருகனை பிடித்து சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் இருந்து முருகனை மீட்டு கைது செய்ய முயன்றனர். அப்போது எஸ்ஐ சத்தியசீலனை முருகன் கத்தியால் குத்தினார். இதில் எஸ்ஐக்கு இடது காலில் பலத்த வெட்டு காயம் விழுந்தது. ஆனாலும் விடாமல் முருகனை போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர் விஜயா உடலை போலீசார் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த எஸ்ஐ சத்தியசீலன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

seventeen − 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi