கம்பம்: நீர்வரத்து இல்லாமல், சுருளி அருவி முற்றிலும் வறண்டதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நீர்வரத்து குறையும். கடந்த சில நாட்களாக முற்றிலும் நீர்வரத்து இல்லாததால் அருவி வறண்டது. இதனால், அருவிக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மேலும், சுற்றுலாப்பயணிகள் வருகையும் குறைந்துள்ளது.
இதுகுறித்து கம்பம் கிழக்கு ரேஞ்சர் பிச்சைமணி கூறுகையில், ‘‘நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையும் இல்லாததால் அருவிக்கு நீர்வரத்து இல்லை. இதை பயன்படுத்தி அருவி தண்ணீர் செல்லும் ஆற்று பாதையை வனத்துறை தொழிலாளர்கள் உதவியுடன் சுத்தப்படுத்தி வருகிறோம். பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பின் ஆற்றில் விடும் உடைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்தும் சேகரிக்கப்பட்டு, மொத்தமாக சுருளி அருவிப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.’’ என்றார்.