தாம்பரம்: ஓடிசா ரயில் விபத்து குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். இது வெறும் கண்துடைப்பு விசாரணையாகவே அமையும். உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் இவ்விபத்து குறித்து ஒரு நீதி விசாரணை நடைபெற்றால்தான் ஓரளவிற்கு விபத்திற்கான உண்மையான காரணங்கள் வெளிவரும். ராஜதானியும் சதாப்தியும் இருக்கையில் தற்போது நாட்டிற்கு தேவை வந்தே பாரத் ரயில் இல்லை.
தண்டவாளங்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக காலியாக இருக்கும் மூன்று லட்சம் ரயில்வே காலிப்பணியிடங்கள் நிரந்தர ஊழியர்களுடன் உடனடியாக நிரப்பபட வேண்டும். ரயில் பயணமே பாதுகாப்பானது என்று பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை சார்ந்திருக்கிறார்கள். ஒன்றிய பாஜ அரசு இந்த நம்பிக்கையை உடைத்துள்ளது. ‘குறைந்த செலவு நிறைந்த வசதி, பயணத்தில் பாதுகாப்பு’ என்பது ரயில் பயணத்தின் இலக்கணமாக இருந்து வந்தது. ஒன்றிய பாஜ அரசு பதவி ஏற்றதும் அதிக கட்டணம், குறைந்த வசதிகள், பயணத்தில் பாதுகாப்பின்மை என ரயில் பயணத்தின் தன்மையை மாற்றி விட்டது.
அதானி அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் காலடியில் ரயில்வே துறையை வைப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு முன் முயற்சி போல இந்த நிலைமை தோன்றுகிறது. ரயில் பயணங்களை பாதுகாப்பு மிகுந்ததாக அமைய வைக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். தனியார் மயம் மூலம் ரயில்வே நிறுவனத்தை தடம் புரள வைக்கும் முயற்சியை மோடி அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.