வாலாஜாபாத்: அய்யம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பேட்டை ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, அரசு மேல்நிலைப்பள்ளி, வங்கிகள், அங்கன்வாடி மையம், நூலகம், ஆரம்ப சுகாதார நிலையம், இ-சேவை மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த, அய்யம்பேட்டை ஊராட்சியில் மேம்படுத்தப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, நாள்தோறும் சுற்றுவட்டார 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வந்து, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காசநோய், பிரசவம், பல் உள்ளிட்ட சிகிச்சை பெற்று செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ஆரம்ப சுகாதாரத்தின் சுற்றுச்சூழல் அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்டு, 3 பக்கங்களில் சுற்றுசுவர் அமைக்கப்பட்டு, ஒரு பகுதியில் மட்டும் சுற்றுச்சுவர் அமைக்கவில்லை.
இதனால், அப்பகுதியில் மேய்சலுக்காக வரும் கால்நடைகள், இந்த ஆரம் சுகாதார நிலையத்தில் தஞ்சமடைவதால், நோயாளிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. இதனால், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை, மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு, இங்குள்ள அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.