புழல், ஏப். 25: புழல் பெண்கள் சிறையில் திரிபுராவை சேர்ந்த சலீமா கத்தல் (40) போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சிறைக் காவலர் சசிகலா கைதிகள் தங்கும் அறைகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டு கதவை பூட்டிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்த சலீமா கத்தல், கதவை மூட வேண்டாம், என்று கூறி காவலர் சசிகலாவிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். மேலும், சிறைக் காவலர் சசிகலாவின் சீருடையை பிடித்து கீழே தள்ளி கொன்றுவிடுவேன் என மிரட்டினார். உடனே சக பெண் காவலர்கள் சலீமா கத்தலை சிறை அறைக்கு அழைத்துச் சென்று கதவைப் பூட்டினர். இதுதொடர்பாக, பெண்கள் சிறை துணை ஜெயிலர் அனுராதா, புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து சலீமா கத்தலிடம் விசாரிக்கின்றனர்.
வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபா (21). எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா (25). திருநங்கைகளான இருவரும் கொடுங்கையூர் பகுதியில் மதுபானம் விற்றது தொடர்பாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஸ்ரீபா மற்றும் அகல்யா ஆகியோருக்கும் பக்கத்து சிறை அறையில் அடைக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த லட்சுமி (50) என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவதூறாக பேசிய லட்சுமியை திருநங்கைகள் பா, அகல்யா ஆகியோர் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில், படுகாயமடைந்த லட்சுமியை போலீசார் மீட்டு சிறை மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்படி, போலீசார் இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.