Sunday, May 5, 2024
Home » புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20 கோடியில் புதிய பாலம் பழைய தரைப்பாலம் அகற்றும் பணி தீவிரம்

புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20 கோடியில் புதிய பாலம் பழைய தரைப்பாலம் அகற்றும் பணி தீவிரம்

by Karthik Yash

ஊத்துக்கோட்டை, ஏப். 25: பெரியபாளையம் அருகே புதுப்பாளையம், காரணி, எருக்குவாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள், புதுப்பாளையம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் வழியாக ஆரணிக்கு சென்று அங்கிருந்து கும்மிடிப்பூண்டி, கவரைபேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கும், பெரியபாளையம் சென்று அங்கிருந்து திருவள்ளூர், பூந்தமல்லி, சென்னை ஆகிய பகுதிகளுக்கும் படிப்பு, வேலை, வியாபார சம்பந்தமாகவும் சென்று வருவார்கள்.

இந்நிலையில் மழைக்காலத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரி நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டால் அந்த தண்ணீர் வெள்ளப்பெருக்காக மாறி நாகலாபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் வழியாக ஆரணி, பொன்னேரிக்கு சென்று பழவேற்காடு கடலில் கலக்கும். அவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது புதுப்பாளையம் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கிவிடும். மேலும் நீர்வரத்து அதிகமாக வந்தால், கிராம மக்கள் 10 கி.மீ சுற்றிக்கொண்டு பெரியபாளையம் சென்று அங்கிருந்துதான் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியும். இதனால் புதுப்பாளையம் கிராமத்திற்கு ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என 10 கிராம மக்கள் கடந்த வருடம் கோரிக்கை வைத்தனர்.

இதையறிந்த அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், அப்போதைய திருவள்ளூர் கலெக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் ஆய்வு செய்து பாலம் கட்டுவதற்காக ₹20 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ₹20 கோடியில் பாலம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தரைப்பாலத்தின் அருகில் கிராம மக்கள் செல்ல மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாலம் கட்டுவதற்காக, பழைய தரைப்பாலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi