வேளச்சேரி, ஏப்.28: ஆலந்தூர் தில்லை கங்கா நகரில் இருந்து பரங்கிமலை-வேளச்சேரி உள்வட்டச்சாலை வழியாக நேற்று டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. வாணுவம்பேட்டை அருகே சென்றபோது திடீரென டேங்கர் லாரியின் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது, லாரியின் இடதுபுறத்தில் பைக்கில் சென்ற ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பைச் சேர்ந்த தலைமைக் காவலர் தளவாய் (40) என்பவருக்கு கால் மற்றும் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல் முகலிவாக்கம், பிருந்தாவன் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஷியாம் கரண் (30) என்பவருக்கு கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.