Saturday, April 27, 2024
Home » கோடை சீசன் களைகட்டுகிறது; குமரி சுற்றுலாத்தலங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்

கோடை சீசன் களைகட்டுகிறது; குமரி சுற்றுலாத்தலங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்

by MuthuKumar
Published: Last Updated on

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கோடைகால சீசனையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி கடற்கரை, திற்பரப்பு அருவி பகுதிகள் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடைகால சீசனையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் அனைத்து நாட்களிலும் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வருகின்றனர்.

முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஆனந்த குளியல் போட்டனர். கடல் அழகை ரசித்து செல்பி எடுத்து கொண்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர். மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, விவேகானந்த புரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், பாரத மாதா கோயில், கன்னியாகுமரி சன்செட் பாயின்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர். இங்குள்ள லாட்ஜுகளும் நிரம்பி வழிகின்றன. சுற்றுலா பயணிகள் அதிகரிப்பால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் திற்பரப்பு பகுதியிலும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வருகை புரிந்தனர். இங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு அருவியாக விழுவதால் சுற்றுலாபயணிகள் உல்லாச குளியல் போட்டனர். மேலும் கோதையாற்றின் தடுப்பணையில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் இருந்தனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரை, திற்பரப்பு பகுதி உள்ளிட்ட குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்கள் மக்கள் வெள்ளத்தால் களைகட்டியது.

You may also like

Leave a Comment

nineteen + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi