Thursday, May 9, 2024
Home » நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றிய விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றிய விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்

by Mahaprabhu

சென்னை: நாட்டில் உள்ள அனைத்து கிராம மக்களும் லோக் அதாலத் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் 2023ம் ஆண்டு மத்தியஸ்த சட்டம் பற்றிய சிறப்பு பயிற்சி குறித்த கருத்தரங்கம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கின் தொடக்க விழாவில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலமாக சட்ட உதவி, லோக் அதாலத், கைதிகளுக்கான சட்ட உதவி உள்பட 19 திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். மாநிலம் முழுவதும் கடந்த 2023 ஜனவரி முதல் 2024 பிப்ரவரி வரை சட்ட உதவி கோரி 51,824 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 48,352 விண்ணப்பங்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. லோக் அதாலத் மூலம் 863 அமர்வுகள்அமைக்கப்பட்டு 3.53 லட்சம் வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

இதன்மூலம், 2,652 கோடி ரூபாய் அளவுக்கு பைசல் செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் மத்தியஸ்த மையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் அமைக்கப்பட்டது. அந்த முதல் மையம் செயல்பட்ட அறையை நினைவு மையமாக பாதுகாத்து வருகிறோம். தமிழகத்தில் 32 மத்தியஸ்த மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இன்னும் 17 மையங்களை தொடங்க உள்ளோம். அனைத்து சட்டங்களிலும் மத்தியஸ்த பிரிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் 2023ம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள மத்தியஸ்த சட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். கருத்தரங்கில் உரையாற்றிய உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா, கடந்த 2005ம் ஆண்டு மத்தியஸ்த நடைமுறையை கொண்டு வர வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது நிலை மாறி விட்டது. மத்தியஸ்த மையங்கள் தற்போது முழுமையாக வழக்கறிஞர்களால் நடத்தப்படுகிறது. இதில், 48 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றார். மத்தியஸ்தத்துக்கு பிறப்பிடம் சென்னை உயர் நீதிமன்றம் தான் எனக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சிவ் கண்ணா, மத்தியஸ்தத்துக்கு பல திறமைகள் தேவை. சட்ட அறிவு வேண்டும். உளவியல் தெரிந்திருக்கவேண்டும். பிரச்னைகளுக்கு பாரபட்சம் இல்லாத சிறந்த தீர்வு முறை தான் மத்தியஸ்தம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. மாவட்ட நீதிமன்றங்களில் 2.37 கோடி வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 20.67 லட்சம் வழக்குகளும், உச்சநீதிமன்றத்தில் 52,660 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் முடிவுக்கு வர எத்தனை நாட்களாகும் என்று எந்த புள்ளிவிவரங்களும் இல்லை.

நிலுவையில் உள்ள இந்த வழக்குகளில் மாவட்ட நீதிமன்றங்களில் ஒரு நீதிபதி 25,129 வழக்குகளும், உயர் நீதிமன்றத்தில் 2,636 வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் 1,548 வழக்குகளும் விசாரிக்கப்பட வேண்டும். இது சாத்தியமற்றது. இந்தியாவில் லோக் அதாலத் மூலம், 2023ல் 6 கோடி வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. அனைத்து கிராம மக்களும் லோக் அதாலத் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். மத்தியஸ்தத்துக்கு வந்த 35 லட்சம் வழக்குகளில், 10 முதல் 11 லட்சம் வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. ஆன் லைன் மூலமும் மத்தியஸ்தம் செய்யும் திட்டமும் கொண்டு வரப்பட உள்ளது என்று பேசினார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் தலைவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் வரவேற்புரையாற்றினார். புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் நன்றியுரையாற்றினார்.

You may also like

Leave a Comment

12 + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi