Thursday, May 16, 2024
Home » கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சுகாதாரமற்ற குடிநீரால் தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகளால் தொற்று நோய் பரவும்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சுகாதாரமற்ற குடிநீரால் தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகளால் தொற்று நோய் பரவும்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை

by Suresh

வேலூர்: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஐஸ் கட்டிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால் சுகாதாரமற்ற குடிநீரினால் தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகளால் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சாலையோரம் புதிதாக பழச்சாறு, ஜூஸ் கடைகள் முளைத்துள்ளன. மேலும் நிரந்தரமாக உள்ள குளிர்பான கடைகளிலும் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவ்வாறு பல கடைகளில் பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் தரமானதுதானா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சுகாதாரமற்ற குடிநீரினால் தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு உருவாகும் குளிர்பானம், பழச்சாறு, சர்பத் போன்றவற்றை உட்கொள்வோருக்கு தொற்று நோய் வர வாய்ப்புள்ளது. தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் பெரிய வகை ஐஸ் கட்டிகள் கடல் உணவு மற்றும் மலர் அங்காடிகளில் உணவு மற்றும் பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் பெரிய வகை ஐஸ் கட்டிகளில் மறுசுழற்சி ஆக விற்பனை செய்யக்கூடாது. ஐஸ் கட்டிகள் விலை குறைவானது என்பதற்காக சில்லரை மற்றும் சாலையோர வியாபாரிகள் இதனை பொதுமக்கள் உட்கொள்ளும் உணவுகளில் சேர்க்கக்கூடாது. இவ்வாறான ஐஸ் கட்டிகள் தொண்டை பாதிப்பு, சளி மற்றும் இருமல், மஞ்சள் காமாலை, காலரா போன்ற பல்வேறு வகையான தொற்று நோய் பாதிப்பு ஏற்படும். பொதுமக்கள் உட்கொள்ளக்கூடிய ஐஸ் உணவுகள் பாதுகாப்பு தரங்கள் சட்டம் மற்றும் விதிகள்படி நுண்ணுயிரியல் தரத்தினை கொண்டிருக்க வேண்டும்.

உட்கொள்ள கூடாத ஐஸ் வகைகளை அறிந்து கொள்ள ஏதுவாக தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் நீல நிறமாகவும் வேறுபடுத்திக் காட்ட வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஐஸ் கட்டிகளை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க வேதிப்பொருட்கள் கலப்போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தரமில்லாத குளிர்பானங்கள் உடலுக்கு ஆபத்து: கோடை காலம் துவங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளிலும் தரமில்லாத குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் மக்கள் குளிர்பானங்களை அதிகம் பருகுவர்.

இந்தாண்டு, கோடைக்காலம் துவக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அனைத்து கடைகளிலும் லெமன் ஜூஸ், கலர் பவுடர் கலந்த குளிர்பானம் போன்றவை பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு வருகின்றன. அதில் ஒரு சில தவிர பெரும்பாலான பாக்கெட்டில் தயாரிப்பு, காலவாதியாகும் தேதி, மூலப்பொருட்கள் உள்ளிட்ட விபரங்கள் இல்லை. தரமில்லாத குளிர்பானங்கள் விற்பனை தற்போது அதிகரித்து வருகிறது. இதை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்னைகளும், ஆபத்தும் ஏற்பட கூடும். எனவே பொதுமக்கள் வெளியே செல்லும்போது தரமில்லாத குளிர்பானங்களை அருந்துவதை கைவிட வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

seventeen + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi