ஊட்டி : கோடை சீசனுக்கு தயார்படுத்தும் வகையில் ஊட்டி மரவியல் பூங்காவில் பல்வேறு வண்ண மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஊட்டியில் நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே கோடை சீசன் சமயத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை பன் மடங்கு அதிகரிக்கும்.
இந்த சமயத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு கோடை சீசனுக்காக ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்கள் தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தாவரவியல் பூங்காவில் பல வண்ண மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரோஜா பூங்காவில் ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டி மான் பூங்கா அருகே 1.58 எக்டர் பரப்பளவில் அமைந்துள்ள மரவியல் பூங்காவும் சீசனுக்காக தயாராகி வருகிறது. பூங்காவில் மலர் செடிகள் நடவு பணிக்காக பூங்காவில் உள்ள பாத்திகளில் உரமிட்டு தயார் செய்யப்பட்டு மேரிகோல்டு, பெட்டூனியா, டெய்சி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் மலர் நாற்றுகள் பனியின் தாக்கத்தில் பாதிக்காமல் இருக்க தாகை செடிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பூங்கா ஊழியர்கள் காலை, மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.